சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
டெல்லி அணிக்கு இந்த போட்டியிலும் தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரித்வி ஷா 11 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சற்று அதிரடியாக ரன் குவித்தார்.
ஆனால், ஷிகர் தவான் 12 ரன்களுக்கும், ரிஷப் பந்த் 5 ரன்களுக்கும் நபி பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால், ஷ்ரேயாஸ் ஐயரும் விக்கெட்டை பாதுகாத்து விளையாடினார். ஆனால், அடுத்தடுத்து களமிறங்கிய தெவாடியா, இங்ராம் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒத்துழைக்கவில்லை.
இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு கட்டத்தில் துரிதமாக ரன் குவிக்க முயன்று ரஷித் கான் பந்தில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, கிறிஸ் மோரிஸ் ஓரளவு அதிரடி காட்டினார். ஆனால், அவரும் புவனேஷ்வர் குமார் ஓவரில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அக்ஸர் படேல் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து ஆறுதல் அளிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அக்ஸர் படேல் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.
ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார், முகமது நபி, சித்தார்த் கௌல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.