தினமணி டாட் காம் ஐபிஎல் XI: அணியில் இடம்பிடித்தவர்களும் தவறவிட்டவர்களும்!
இந்த வருட ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களைக் கொண்டு ஓர் அணி உருவாக்கலாமா?...
ஐபிஎல் 2018 முடிந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ளது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களைக் கொண்டு ஓர் அணி உருவாக்கலாமா? தினமணி டாட் காம் தேர்வு செய்துள்ள ஐபிஎல் கனவு அணியின் விவரம்:
1. கே.எல். ராகுல்
எல்லா லெவன்களிலும் இவருடைய பெயர் நிச்சயம் இருக்கும். அந்தளவுக்கு மகத்தான ஐபிஎல் இவருக்கு அமைந்துள்ளது. 14 ஆட்டங்களில் 659 ரன்கள். 6 அரை சதங்கள். 32 சிக்ஸர்கள். பஞ்சாப் அணி ஆரம்பத்தில் அதிக வெற்றிகள் பெற்றதற்கு முக்கியக் காரணம், ராகுல். இந்த ஐபிஎல்-லில் தனது ஸ்டைலான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். இனி, இந்திய அணியில் இவருக்கு நிரந்த இடம் கிடைக்கும்.
2. சுனில் நரைன்
2 சதங்கள் எடுத்தபோதும் இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருது பெற்றபோதும் வாட்சனால் இந்த அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. இந்த வருட ஐபிஎல் போட்டியின் தொடர் நாயகன் விருதைப் பெற்ற சுனில் நரைன், வாட்சனைப் பின்னுக்குத் தள்ளி அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், இடக்கை பேட்ஸ்மேன் என்பது இவருடைய கூடுதல் பலம்.
16 ஆட்டங்களில் 357 ரன்கள். 2 சதங்கள், 23 சிக்ஸர்கள். ஸ்டிரைக் ரேட் - 189.89. இது, ஷேன் வாட்சனை விடவும் அதிகம். மேலும் அணியில் இரண்டாம் சுழற்பந்துவீச்சாளராக நரைனே தேர்வாகியுள்ளார். 16 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகள். எகானமி - 7.65. இவரை எப்படித் தவிர்க்கமுடியும்?
3. கேன் வில்லியம்சன்
3-ம் நிலையில் களமிறங்க இவரை விடவும் வேறு யாரும் தகுதியானவர் இல்லை. இந்த வருடம் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். 17 ஆட்டங்களில் 735 ரன்கள், 8 அரை சதங்கள்.
4. அம்பட்டி ராயுடு
4-ம் நிலையிலும் களமிறங்குபவர் என்பதால் அணியில் இடம் கிடைத்துள்ளது. 16 ஆட்டங்களில் 602 ரன்கள், 1 சதம் 3 அரை சதங்கள். 34 சிக்ஸர்கள். தேவைப்பட்டால் இவரைத் தொடக்க வீரராகவும் களமிறக்க முடியும். நடு ஓவர்களில் வில்லியம்சனும் ராயுடுவும் ஆடினால் எப்படி இருக்கும்?
5. ரிஷப் பண்ட்
தவிர்க்கமுடியாத மற்றொரு வீரர். 14 ஆட்டங்களில் 684 ரன்கள், 1 சதம் 5 அரை சதங்கள். 37 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதல் இடம் பிடித்துள்ளார். நடுவரிசையில் வில்லியம்சன், ராயுடு, ரிஷப் பண்ட் கொண்ட ஓர் அணி எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
6. தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்)
அணியின் அசைக்கமுடியாத சக்தி. தோனியா தினேஷ் கார்த்திக்கா என்கிற போட்டியில் தோனியே வெல்கிறார். அணியின் கேப்டனாக தோனியைத் தவிர வேறு யார் இருக்கமுடியும்? மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இந்த வருடம் அசத்தியுள்ளார் தோனி. 16 ஆட்டங்களில் 455 ரன்கள். 3 அரை சதங்கள், 30 சிக்ஸர்கள். சுமாரான அணியையே பொக்கிஷமாக மாற்றும் தோனி கையில் இதுபோன்ற ஒரு பலமான அணி கிடைத்தால் என்ன நடக்கும்?
7. ஹார்திக் பாண்டியா
கெளதம், ஹார்திக் பாண்டியா இடையேயான போட்டியில் பாண்டியாவே வெல்கிறார். அணியின் இரு ஆல்ரவுண்டர்களில் ஒருவர். 13 ஆட்டங்களில் 260 ரன்கள். 18 விக்கெட்டுகள். (கெளதம் 126 ரன்களும் 11 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்). ரிஷப் பண்ட் களமிறங்கிய பிறகு தோனியும் ஹார்திக் பாண்டியாவும் களமிறங்கினால் எப்படி இருக்கும்? மேலும், அணியில் ஏற்கெனவே சிறந்த ஐந்து பந்துவீச்சாளர்கள் உள்ளதால் இவர் பந்துவீச வாய்ப்பு கிடைக்காமலேயே போகலாம்.
8. ரஷித் கான்
சிறந்த சுழற்பந்துவீச்சாளர், சிறந்த ஆல்ரவுண்டர், சிறந்த ஃபீல்டர் என டி20க்கு ஏற்ற வீரர் இவர். எல்லா அணிகளும் விரும்பும் வீரர். 17 ஆட்டங்களில் 59 ரன்கள் அடித்தாலும் இவர் அடித்த ஆறு சிக்ஸர்களும் அணிக்கு மிகவும் உதவியுள்ளன. 21 விக்கெட்டுகள், எகானமி - 6.73. சுனில் நரைனும் ரஷித் கானும் ஒரே சமயத்தில் பந்துவீசினால் கண்கொள்ளக்காட்சியாக இருக்கும்!
9. ஆண்ட்ரூ டை
இந்த வருடம் இவருக்கு மகத்தான ஐபிஎல். 14 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகள் எடுத்து, அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம்.
10. உமேஷ் யாதவ்
புவனேஸ்வர் குமாரை விடவும் அதிக விக்கெட்டுகள், குறைந்த எகானமி என்பதால் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இந்த வருடம் ஆர்சிபி அணியில் இவருடைய பங்களிப்பு தனியாகத் தெரிந்தது. இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடிக்க இந்த வருட ஐபிஎல் கைகொடுக்கும்.
10. ஜஸ்ப்ரித் பூம்ரா
14 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகள். எகானமி - 6.88. சித்தார்த் கெளலை விடவும் அதிக விக்கெட்டுகள் எடுத்தாலும் (21 விக்கெட்டுகள்), குறைந்த எகானமியால் பூம்ராவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
***
போட்டி கடுமையாக உள்ளதால் பேட்ஸ்மேன்களில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஷிகர் தவன், ஜாஸ் பட்லர், ஷேன் வாட்சன், டி வில்லியர்ஸ் போன்ற வீரர்களுக்கும் பந்துவீச்சாளர்களில் சித்தார்த் கெளல், குல்தீப் யாதவ், டிரெண்ட் போல்ட் போன்ற வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.