சீன ஓபன் பாட்மிண்டன் தொடர்: பி.வி. சிந்து சாம்பியன்!
சீனாவின் புஷாவ் நகரில் நடந்த சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 'சாம்பியன்' பட்டம் வென்று சாதனை படைத்தார்.
புஷாவ்: சீனாவின் புஷாவ் நகரில் நடந்த சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
சீனாவின் புஷாவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்திய 'ஒலிம்பிக்' நாயகி பி.வி.சிந்து மற்றும் சீனாவின் சுன் யூ ஆகிய இருவரும் மோதினர்.
ஆரம்பத்திலிருந்தே அனல் பறந்த இந்த போட்டியில் துவக்கம் முதல் சிந்து ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் முதல் செட்டை 21-11 என மிகச்சுலபமாக பி.வி. சிந்து கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட சீன வீராங்கனை சுன் யூ இரண்டாவது செட்டை 17-21 என கைப்பற்றினார்.
அதன் பின்னர் கோப்பையை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 21-11 என சிந்து எளிதாக கைப்பற்றி 'சாம்பியன்' பட்டம் வென்றார்.
ரியோ ஒலிம்பிக் வெற்றிக்கு பிறகு சிந்து வெல்லும் முதல் சர்வதேச சாம்பியன் பட்டம் இதுவாகும்.