முகப்பு
செய்திகள்

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஹெராத் விலகல்!

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஹெராத் விலகியுள்ளார்...

Updated On : 8 ஆகஸ்ட், 2017 at 10:52 AM
பகிர்:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஹெராத் விலகியுள்ளார்.

இலங்கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் குணரத்னே காயம் காரணமாக முதல் டெஸ்டிலிருந்து விலகினார். இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 31 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை இரண்டாவது ஸ்லிப் திசையில் நின்ற குணரத்னே பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பந்து தாக்கியதில் குணரத்னேவின் பெருவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார்.

அடுத்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் தசைப்பிடிப்பு காரணமாக இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் பாதியிலேயே விலகினார். அவர் 2-ஆவது நாளில் பந்துவீசவில்லை. பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பிரதீப் அதிகாரபூர்வமாக விலகினார். முன்னதாக முதல் டெஸ்டில் அவர் 6 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் பல்லகெலேவில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் விலகியுள்ளார். முதுகுவலி காரணமாக அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவும் இடம்பெறமாட்டார். ஐசிசி விதிமுறையை மீறியதற்காக இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு பல்லகெலேவில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.  முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்ட நிலையில், "பாலோ-ஆன்' பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.