இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையும், 2-ஆவது ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் அபார வெற்றி கண்டது. இதனால், 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமநிலையில் உள்ளது.
இதையடுத்து 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 27.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரர் தரங்கா, சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சமரவிக்ரமாவும் 42 ரன்களுக்கு வெளியேறினார்.
அப்போதைய சூழலில் இலங்கை 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின்னர் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன் எடுக்கத் திணறினர். சுழற்பந்துவீச்சாளர்கள் சாஹல் மற்றும் குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இலங்கை அணி அடுத்த 55 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.
சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பாண்டியா 2, பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.