இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொது மேலாளர் ஆர்.பி.ஷா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவர் வயது முதிர்வு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ வர்த்தக விவகாரங்களில் முடிவெடுக்கும் முக்கிய நபராக ஆர்.பி.ஷா செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஆர்.பி.ஷா கூறுகையில், "நான் பிசிசிஐ பொது மேலாளர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். எனக்கு இப்போது 61 வயதாகிவிட்டது. அதன் காரணமாக பதவியிலிருந்து விலகியிருக்கிறேன். இந்த முடிவை கடந்த அக்டோபரிலேயே எடுத்துவிட்டேன். நான் புணேவில் வசித்து வருகிறேன். அடிக்கடி மும்பை வந்து செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. நான் பதவி விலகியதற்கு பிசிசிஐ நிர்வாகக் குழுவின் நெருக்கடி காரணமல்ல. எனக்கும், பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. அவர் என்னை தொடர்ந்து பொது மேலாளராக இருக்கும்படி கூறினார். ஆனால் நான் என்னை விடுவிக்குமாறு ராகுல் ஜோரியிடம் கூறிவிட்டேன்' என்றார்.
ஆனால் பிசிசிஐ வட்டாரங்களோ, முன்னாள் சிஏஜி தலைவர் வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு, பிசிசிஐயின் அனைத்து விவகாரங்களிலும் தீவிரக் கவனம் செலுத்தி வருவதன் காரணமாகவே ஆர்.பி.ஷா பதவி விலகியுள்ளார் என தெரிவித்துள்ளன.