முகப்பு
செய்திகள்

தோனியின் 5 புத்திசாலித்தனமான முடிவுகள்! (வீடியோ இணைப்பு)

ஒரு கேப்டனாக தோனியின் மகத்தான 5 தருணங்கள்!

Updated On : 5 ஜனவரி, 2017 at 6:25 PM
பகிர்:

ஒருநாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மஹேந்திர சிங் தோனி (35) புதன்கிழமை அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ஒரு கேப்டனாக தோனியின் மகத்தான 5 தருணங்கள்!

2007 டி20 உலகக்கோப்பை இறுதிச்சுற்று

Advertisement

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை. ஹர்பஜன் சிங்குக்குப் பதிலாக ஜொகிந்தர் சர்மாவை அழைத்தார் தோனி. முதல் 2 பந்துகளில் 7 ரன்கள். பதற்றத்தில் இருந்தார்கள் இந்திய ரசிகர்கள். ஆனாலும் மிஸ்பா வீழ்ந்தார். இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. தோனி என்கிற மகத்தான தலைவன் பிறந்தான் அந்த நொடியில்.

2011 உலகக்கோப்பை இறுதிச்சுற்று

275 ரன்கள் இலக்கு. சச்சினும் சேவாக்கும் அதிக ரன்கள் குவிக்கவில்லை. யுவ்ராஜ் சிங்குக்கு முன்பாக களமிறங்கினார் தோனி. 79 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். அந்தக் கடைசி சிக்ஸர்! ஆ! மறக்கமுடியுமா?

2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிச்சுற்று

18 பந்துகளில் 28 ரன்கள். 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. இங்கிலாந்து அணி நிச்சயம் ஜெயிக்கும் என்கிற நிலைமை. 18-வது ஓவரை வீச இஷாந்த் சர்மாவை அழைத்தார் தோனி. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் இஷாந்த். கோப்பையை வென்றது இந்தியா. 

2013 முத்தரப்புப் போட்டி

இறுதிச்சுற்றில் இலங்கையுடன் மோதியது இந்தியா. இலங்கை 201 ரன்கள் எடுத்தது. ஆனால் 182 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. கடைசியாக தோனியும் இஷாந்த் சர்மாவும் மட்டுமே. 18 பந்துகளில் 19 ரன்கள் தேவை. 48-வது ஓவரை மலிங்கா வீசினார். சிங்கிள் ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் இஷாந்த் சர்மா, மலிங்கா பந்துவீச்சை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக அவற்றைத் தவிர்த்தார் தோனி. இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டன. எரங்கா வீசியா அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்தார் கேப்டன் கூல். 


2016 டி20 உலகக்கோப்பை

ரசிகர்களால் இந்த ஆட்டத்தையும் கடைசிப் பந்தையும் மறக்கவேமுடியாது. வங்கதேசத்துக்கு மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை. ஆனால் அடுத்த இரு பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா. கடைசிப் பந்தின்போது கையுறைக் கழற்றினார் தோனி. இதுதான் நடக்கும் என்பதை அவர் முன்பே கணித்திருந்தார். பேட்ஸ்மேனால் அந்தப் பந்தை எதிர்கொள்ளமுடியவில்லை. கடைசிப் பந்து அவரிடமே சென்றது. ஆனாலும் ரன் எடுக்க முயன்றார்கள் வங்கதேச வீரர்கள். ஆனால் பாய்ந்துவந்து ஸ்டம்பை வீழ்த்தினார் தோனி. அடடா! என்ன ஒரு காட்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.