‘தங்க மகன்’ லட்சுமணனுக்கு ரூ. 20 லட்சம்: அரசு அறிவிப்பு!
ஆசியத் தடகளப் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று...
ஆசியத் தடகளப் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
22- ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லஷ்மணன் 14 நிமிடம் 54.48 நொடிகளில் பந்தைய தூரத்தை எட்டி தங்கத்தை சொந்தமாக்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் சொக்குராணி கிராமத்தைச் சேர்ந்த வீரரான லஷ்மணன் இந்த வெற்றி குறித்து கூறுகையில், 'எப்போதும் ஓரு சிறந்த ஓட்டப் பந்தய வீரனாகவும், கடின உழைப்பாளியாகவுமே இருக்க விரும்புகிறேன். அதன் பலனாகவே தற்போது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது' என்றார்.
இந்த வெற்றியின் மூலமாக, லண்டனில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு லஷ்மணன் தகுதிபெற்றுள்ளார்.
போட்டியின் 4-ஆவது நாளில் லட்சுமணன் மற்றொரு தங்கம் வென்றார். லட்சுமணன், 5,000 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்த நிலையில், இப்போது 10,000 மீ. ஓட்டத்திலும் தங்கம் வென்று சாதனை செய்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 10,000 மீ. ஓட்டத்தில் லட்சுமணன் 29 நிமிடம், 55.87 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இதேபிரிவில் மற்றொரு இந்தியரான கோபி வெள்ளி (29:58.89) வென்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் சொக்கூரணி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், உதகையில் உள்ள மெட்ராஸ் (ரெஜிமென்ட்) ராணுவ படைப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
இரு தங்கப் பதக்கங்கள் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இதேபோல 400 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவுக்கு ரூ. 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.