இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், இலங்கையின் காலே நகரில் இன்று தொடங்கியுள்ளது. இதே காலே மைதானத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் 176 ரன்கள் என்ற இலக்கை எட்டும் முயற்சியில், 112 ரன்களில் வீழ்ந்து மோசமான தோல்வியைத் தழுவியது இந்தியா. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். 2015-ஆம் ஆண்டு தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறவில்லை. ஹார்தி பாண்டியா அறிமுகமாகியுள்ளார். சமி, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் வேகப்பந்துவீச்சாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு இது 50-வது டெஸ்ட் போட்டியாகும். இதேபோல இலங்கை அணியில் குணதிலகா அறிமுகமாகியுள்ளார்.