ஏடிபி தரவரிசை: 5-ம் இடத்தில் ஜோகோவிச்!
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஏடிபி தரவரிசையில் ஜோகோவிச், 5-ம் இடத்தில் உள்ளார்...
உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார் ஜோகோவிச். அப்போது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்தப் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார் ஜோகோவிச். இந்த நிலையில் இந்த எதிர்பாராத முடிவை எடுத்துள்ளார்.
தற்போது பெல்கிரேடில் இருக்கும் ஜோகோவிச், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பதாவது: இந்தத் தருணத்தில் துரதிருஷ்டவசமாகக் கடினமான முடிவை எடுக்க நேரிட்டது. விம்பிள்டன் போட்டி இந்த முறை எனக்குக் கடினமானதாக அமைந்தது. எனது முழங்கைக் காயம் குறித்து பல்வேறு மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் அனைவருமே எனக்கு ஓய்வு தேவை என கூறிவிட்டனர்.
சில காயத்தை உடனடியாக குணப்படுத்த முடியாது. அதில் முழங்கை காயமும் ஒன்று. அதற்கு சிகிச்சை பெற்றாலும், அது இயல்பாகவே குணமடைய வேண்டும். ஆனால் தொழில்முறை விளையாட்டில் இருந்துகொண்டு நீண்ட நாள்கள் ஓய்வில் இருப்பது என்பது கடினமானதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியிருப்பதால் அமெரிக்க ஓபன், டேவிஸ் கோப்பை உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் ஜோகோவிச்சால் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஏடிபி தரவரிசையில் ஜோகோவிச், 5-ம் இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு அவர் 4-ம் இடத்தில் இருந்தார். வாவ்ரிங்கா 4-ம் இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் ஆண்டி முர்ரேவும் இரண்டாம் இடத்தில் ரஃபேல் நடாலும் மூன்றாம் இடத்தில் ரோஜர் ஃபெடரரும் உள்ளார்கள்.