சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அவருக்கு பொறுப்பு நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ கடந்த வாரம் முதல் வரவேற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், பிசிசிஐ இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து கோலி - கும்ப்ளே இடையே மோதல் நிலவுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில் முன்னாள் கேப்டன் கங்குலி இந்த விவகாரம் குறித்து கூறியதாவது:
கும்ப்ளேவுடனான மோதல் குறித்து கோலி என்னிடம் பேசியதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுபோன்ற முக்கியமான போட்டியின்போது இப்பிரச்னை குறித்து பேசுவது சரியல்ல. நான் அவரிடம் ஹலோ மட்டுமே சொன்னேன்.
கோலியும் கும்ப்ளேவும் சண்டை போட்டாலும் போடாவிட்டாலும் முதல் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும். இதுபோன்ற பெரிய போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை விடவும் வலுவானது.
கோலி - கும்ப்ளே இடையே என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் பேச இது சரியான நேரம் இல்லை. ஒரு பயிற்சியாளரின் பணி என்பது கேப்டனுக்கு உதவுவதுதான். அணியின் கேப்டன்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கவேண்டும். அதற்கு உறுதுணையாகப் பயிற்சியாளர் இருக்கவேண்டும். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி சரியாக விளையாடாவிட்டால் கேப்டன், பயிற்சியாளர் ஆகிய இருவருமே விமரிசிக்கப்படுவார்கள்.