பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
பயங்கரவாதம், ஊடுருவல்களை திரிணமூல், காங்கிரஸ் ஊக்குவிப்பதாக அமித் ஷா பேசியது குறித்து...
காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து அவர்களை ஊக்குவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப். 26) குற்றம் சாட்டினார்.
ஆனால், மோடி ஆட்சி அமைத்ததிலிருந்து பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீர்க்கமாக பாஜக மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான முதல் கட்டத் தேர்தல் ஏப். 23 ஆம் தேதி முடிந்த நிலையில், ஏப். 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரசாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அந்தவகையில், மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தின் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸை விமர்சித்து அமித் ஷா பேசியதாவது:
''மமதா பானர்ஜியும் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தபோது பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்தனர். ஆனால், 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததும் உரி தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. புல்வாமா தாக்குதல் நடந்தது; நாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தோம். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடந்தது. ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானிலேயே நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்து பழி தீர்த்தோம். பயங்கரவாதம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றியுள்ளார் மோடி.
இதேபோன்று நக்சல் அச்சுறுத்தலில் இருந்தும் நாட்டை விடுவித்துள்ளார். இப்போது மேற்கு வங்கத்தில் எங்களிடம் அதிகாரத்தைக் கொடுங்கள். எல்லை வழியாக நுழையும் ஊடுருவல்களை ஒவ்வொன்றாக விரட்டியடிப்போம். ஊடுருவியவர்களை ஒவ்வொன்றாகத் தேடி அனுப்புவோம்.
சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் ஊடுருவல்காரர்களை ஏன் விரட்டுகிறீர்கள் எனக் கேட்கிறார் மமதா பானர்ஜி? அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். மமதாவின் காலம் முடிந்தது. மே 4 ஆம் தேதி பாஜக ஆட்சி அமையும். முதல்வராக பாஜகவைச் சேர்ந்தவர் இருப்பார்.
அதன் பிறகு வாக்காளர் அடையாள அட்டையில் இருந்து மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மேற்கு வங்கத்தில் இருந்தும் ஊடுருவியவர்கள் விரட்டப்படுவார்கள்.
மேற்கு வங்கத்தின் உள்ள குண்டர்கள், ரெளடிகள் மே 29 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. அவ்வாறு வந்தால், மே 5 ஆம் தேதி அவர்களுக்கு இரக்கம் காட்டப்படாது. 29 ஆம் தேதி காலை மேற்கு வங்கத்தின் மகள்கள், சகோதரிகள், தாய்மார்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தாமரையை மலரச் செய்ய வேண்டும்'' என அமித் ஷா பேசினார்.
Mamata and Congress were feeding biryani to terrorists, PM Modi freed country from terrorism Amit Shah
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.