ராஞ்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டத்தின்போது பந்து பவுண்டரிக்கு செல்வதை பாய்ந்து சென்று தடுத்தார் கோலி. அப்போது அவருடைய வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து களத்தில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை. தோள்பட்டையில் காயமடைந்த கோலி, 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். ஆனால் 2-வது நாள் ஆட்டத்தின்போது அவர் பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் தோள்பட்டையில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அவர் பேட்டிங் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை என பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் அவுட் ஆனபின்பு ஆடவந்தார் கோலி.
இந்நிலையில் கோலி களத்தில் இருந்தபோது அவரை ஆஸி. கேப்டன் ஸ்மித்தும் மேக்ஸ்வெல்லும் கிண்டல் அடிக்கும் விதத்தில் நடந்துகொண்டது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிகொள்ள வைத்துள்ளது. முரளி விஜய் 82 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, உணவு இடைவேளைக்குப் பிறகு ஆடவந்தார் கோலி.
இந்த டெஸ்டிலாவது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.
இன்றைய ஆட்டத்தில் ஆஸி. வீரர் மேக்ஸ்வெல், கோலி போலவே பாய்ந்து சென்று ஃபீல்டிங் செய்தார். அப்போது அவர் கோலியைப் போலவே வலது தோள்பட்டையில் கை வைத்து சிரித்தபடி கோலியின் காயத்தைக் கேலி செய்தார்.
அதேபோல கோலி பெவிலியன் திரும்பும்போது ஆஸி. கேப்டன் ஸ்மித்தும் வலது தோள்பட்டையில் கை வைத்து கோலியைக் கிண்டல் செய்யும் விதத்தில் நடந்துகொண்டார். ஆஸி. வீரர்களின் இந்த நடவடிக்கைகள் இந்திய ரசிகர்களிடம் பலவிதமான விமரிசனங்களைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.