ஐபிஎல்: ஆரம்ப ஆட்டங்களில் இருந்து கோலி விலகல்?
கோலியின் பேட்டியை வைத்துப் பார்க்கும்போது பெங்களூர் அணியின் ஆரம்ப ஆட்டங்களில் கோலி இடம்பெற வாய்ப்பில்லை
ராஞ்சியில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸின்போது பவுண்டரியைத் தடுக்க முயன்ற இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஞ்சி டெஸ்டிலேயே அவர் களம் இறங்கினார். எனினும், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
காயத்தின் காரணமாக அவர் தர்மசாலா டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் கோலி, ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தர்மசாலா டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் என்கிற விமரிசனங்களும் எழுந்தன. இந்நிலையில் தனது காயம் குறித்து இன்று கோலி கூறியதாவது: ஆடுகளத்தில் நான் நூறு சதவிகித உடற்தகுதியுடன் இருப்பதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று தகவல் கூறியுள்ளார்.
கோலி, பெங்களூர் அணியின் கேப்டனாக உள்ளார். ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் ஆட்டமே ஹைதராபாத் - பெங்களூர் அணிகளுக்கு இடையேதான். ஹைதராபாத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
Advertisement
கோலியின் பேட்டியை வைத்துப் பார்க்கும்போது பெங்களூர் அணியின் ஆரம்ப ஆட்டங்களில் கோலி இடம்பெற வாய்ப்பில்லை என்று அறியப்படுகிறது.