பெங்களூர் அணிக்கு இது மோசமான ஐபிஎல்.
இதுவரை ஆடிய 13 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்தத் தோல்வியை பெங்களூர் அணியினர் எவ்வாறு அணுகுகிறார்கள்? இதுகுறித்து கோலி கூறியதாவது:
இதுபோன்ற தோல்விகள் எந்த ஒரு விளக்கத்தையும் கோராது. வீரர்களை இது மிகவும் பாதித்துள்ளது. நாங்களும் இதை எப்படியாவது மாற்றிக்காட்டவேண்டும் என்று பார்த்தோம். ஆனால் முடியவில்லை. சிலநேரங்களில் இதுபோல நடக்கும். கடந்த வருடம் எங்களுக்குச் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த வருடம் அப்படியே எதிராக அமைந்துவிட்டது. இவற்றை ஏற்றுக்கொண்டு முன்னே செல்லவேண்டும்.
பலமுயற்சிகள் எடுத்தபிறகும் தோல்விகள் தொடர்கிறபோது ஓய்வறையில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்தவேண்டும். அங்கு எந்தப் பிரச்னையும் எழக்கூடாது. இந்த ஒரு விஷயத்தை நாங்கள் சரியாகவே கையாண்டுள்ளோம். ஓர் அணி சரியாக விளையாடாதபோது இவரால் தான் தோற்றோம் என்று கைகாட்டுவது மிகச்சுலபம். ஆனால் நாங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டோம். சிலநேரங்களில் தோல்விகள் குறித்து சிரித்துக்கொள்வோம். ஒன்றுமே செய்யமுடியாத நிலைமைகளில் ஓய்வறைக்கு வந்து சிரித்துக்கொள்வோம்.
இதுபோல நடக்கும் என்று அணியினர் யாருமே எண்ணிப்பார்க்கவில்லை. ஒன்றிரண்டு வீரர்கள் சரியாக ஆடாதது குறித்துக் கவலைப்படலாம். ஆனால், ஓர் அணியில் உள்ள 11 பேரும் அதேபோல எண்ணுவது அரிதானது.
இந்த சீசனால் எங்கள் வீரர்கள் நிறைய பாடம் கற்றுக்கொண்டார்கள். இதைவிடவும் மோசமாக விளையாடமுடியாது. எனவே இனி எங்கள் ஆட்டத்தில் முன்னேற்றம் காணமுடியும். புதிதாகத் தொடங்க இது ஒரு வாய்ப்பு என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.