முகப்பு
செய்திகள்

இந்திரஜித் 152 ரன்கள்: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுமா தமிழகம்?

இரட்டைச் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 152 ரன்களில் ஆட்டமிழந்தார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழக அணி 3-ம் நாள் உணவு இடைவேளையின்போது 8 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பையில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா 123 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களும் எடுத்தார்கள். தமிழகத் தரப்பில் விஜய் சங்கர் 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தமிழக அணி, 2-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திரஜித் 105 ரன்களுடனும் அஸ்வின் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். இந்நிலையில் அஸ்வின், 13 ரன்களுடன் தவல் குல்கர்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த ஜெகதீசன் 21 ரன்களில் கோஹில் பந்துவீச்சில் வெளியேறினார். வேகப்பந்து வீச்சாளர் யோ மகேஷ் பொறுப்பாக விளையாடி இந்திரஜித்துக்கு நல்ல துணையாக விளங்கினார். 237 பந்துகளில் 150 ரன்களை எட்டினார் இந்திரஜித். இரட்டைச் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 152 ரன்களில் ஆட்டமிழந்தார். 

மதிய உணவு இடைவேளையின்போது தமிழக அணி 8 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற இன்னும் 29 ரன்கள் எடுக்கவேண்டியுள்ளது. இதனால் இந்த ஆட்டத்தின் அடுத்த ஒரு மணி நேரம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக அணி முன்னதாக ஆந்திரம் மற்றும் திரிபுரா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தைச் சமன் செய்ததன் மூலம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெறாத தமிழக அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.