ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது .
இந்திய கேப்டன் விராட் கோலி 107 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 6.1 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் ஃபாக்னர், ஆடம் ஸம்பா ஆகியோருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ரஹானே அரை சதம்: டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்ய, அஜிங்க்ய ரஹானேவும், ரோஹித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர். இந்தியா 19 ரன்களை எட்டியபோது ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 14 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்த நிலையில் நாதன் கோல்ட்டர் நீல் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.
இதையடுத்து அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்தார் கேப்டன் கோலி. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. இதன்பிறகு விராட் கோலி 60 பந்துகளில் அரை சதமடிக்க, அஜிங்க்ய ரஹானே 62 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி, இந்தியா 23.4 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. ரஹானே 64 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இந்த ஜோடி 111 பந்துகளில் 102 ரன்கள் குவித்தது.
விராட் கோலி 92: இதையடுத்து களம்புகுந்த மணீஷ் பாண்டே 3 ரன்கள் சேர்த்த நிலையில் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதையடுத்து கேப்டன் கோலியுடன் இணைந்தார் கேதார் ஜாதவ். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தது. இந்தியா 186 ரன்களை எட்டியபோது கேதார் ஜாதவ் 24 ரன்களில் கோல்ட்டர் நீல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி களமிறங்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 92 ரன்கள் எடுத்திருந்தபோது கோல்ட்டர் நீல் பந்துவீச்சில் போல்டு ஆனார். 107 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் குவித்த கோலி, 8 ரன்களில் 31-ஆவது சதம் விளாசும் வாய்ப்பை நழுவவிட்டார்.
கோலியைத் தொடர்ந்து தோனி 5 ரன்களில் நடையைக் கட்ட, 39.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. இதன்பிறகு இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது. கடைசிக் கட்டத்தில் புவனேஸ்வர் குமார் 33 பந்துகளில் 20, ஹார்திக் பாண்டியா 26 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து வெளியேற, 50 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. ஜஸ்பிரித் பூம்ரா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் கோல்ட்டர் நீல், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதிர்ச்சித் தொடக்கம்: பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஹில்டன் கார்ட்ரைட், டேவிட் வார்னர் ஆகியோரை தலா ஒரு ரன்னில் வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார். இதனால் 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா.
இதையடுத்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்தார் டிராவிஸ் ஹெட். இந்த ஜோடி 76 ரன்கள் சேர்த்தது. நீண்ட நேரம் போராடிய இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து வெளியேற, அந்த அணியின் சரிவு ஆரம்பமானது. பின்னர் வந்த அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த நிலையில், சாஹல் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஸ்டெம்பிங் ஆனார்.
குல்தீப் ஹாட்ரிக்: ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் தனியாளாகப் போராடிய ஸ்மித், ஆஸ்திரேலியா 138 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார். அவர் 76 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்து பாண்டியா பந்துவீச்சில் மாற்று ஆட்டக்காரரான ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார். அப்போதே ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியானது.
இதன்பிறகு 33-ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், 2-ஆவது பந்தில் மேத்யூ வேட் (2), 3-ஆவது பந்தில் ஆஷ்டன் அகர் (0), 4-ஆவது பந்தில் பேட் கம்மின்ஸ் (0) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
ஸ்டோனிஸ் அதிரடி: இதையடுத்து கோல்ட்டர் நீல் களமிறங்க, மறுமுனையில் மார்கஸ் ஸ்டோனிஸ் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனிடையே கோல்ட்டர் நீல் 8 ரன்களில் வெளியேற, கேன் ரிச்சர்ட்சன் களம்புகுந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்டோனிஸ் 58 பந்துகளில் அரை சதமடிக்க, ரிச்சர்ட்சன் ரன் ஏதுமின்றி புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதனால் ஆஸ்திரேலியா 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு சுருண்டது. ஸ்டோனிஸ் 65 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது ஆட்டம் இந்தூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ஹாட்ரிக் சாதனை படைத்த 3-ஆவது இந்தியர்!
இந்த ஆட்டத்தில் 33-ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களான மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ் ஆகியோரை முறையே 2, 3, 4-ஆவது பந்துகளில் வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3-ஆவது இந்தியர் என்ற பெருமை குல்தீப் யாதவுக்கு கிடைத்தது. இதற்கு முன்னர் 1987-இல் நியூஸிலாந்துக்கு எதிராக சேதன் சர்மாவும், 1991-இல் இலங்கைக்கு எதிராக கபில்தேவும் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.
தப்பிப் பிழைத்த பாண்டியா!
இந்த ஆட்டத்தில் 48-ஆவது ஓவரை வீசிய ரிச்சர்ட்சன், 4-ஆவது பந்தை புல்டாஸ் ஆக வீச, அதை பாண்டியா தூக்கியடித்தார். அந்த பந்து ஸ்மித்தின் கையில் தஞ்சம்புகுந்தது. அப்போது மழையும் வர, அது நோ-பாலா, இல்லையா என்பதை உறுதி செய்யாமலேயே பாண்டியா அங்கிருந்து வெளியேறினார். ஆனால் அது நோ-பாலாக இருக்கலாம் என கருதிய ஸ்மித், ஸ்டெம்பை தகர்த்து ரன் அவுட்டும் ஆக்கினார். அதன்பிறகு அந்த பாலை நோ-பால் என அறிவித்த நடுவர், ரன் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பாண்டியா தப்பினார். இதேபோல் புவனேஸ்வர் குமார் அடித்த பந்து ஒன்று, எதிர்முனையில் நின்ற பாண்டியாவின் ஹெல்மெட்டின் முன்புற பகுதியில் தாக்க, அவர் நிலைகுலைந்து சரிந்தார். எனினும் காயமின்றி தப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.