டேபிள் டென்னிஸ்: வெற்றிக் கொடி நாட்டியது இந்தியா
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியா 3-0 என்ற செட் கணக்கில் நைஜிரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியா 3-0 என்ற செட் கணக்கில் நைஜிரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
ஏற்கெனவே இந்திய பெண்கள் அணி சிங்கப்பூர் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அதன் தொடர்ச்சியாக இந்திய ஆடவர் அணியும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி சிறப்பாக விளையாடியது. இந்திய வீரர் சரத்கமல் நைஜிரிய வீரர் போட் அபிதுன்னுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தோல்வியுற்றாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக ஆடி 4-11, 1-4, 11-5, 11-9 என்ற செட் கணக்கில் வென்றார்.
மற்றொரு முன்னணி வீரரான சத்யன் முதல் ஆட்டத்தில் போராடி தோல்வியுற்றார். எனினும் தளராமல் முந்தைய காமன்வெல்த் போட்டி தங்கம் வென்றவரான செகுன் டோரியாலவை 10-12, 11-3, 11-3, 11-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன்-ஹர்மீத் தேசாய் இணை 11-8, 11-5, 11-3 என்ற கணக்கில் நைஜிரியாவின் அபிதுன்-ஓலாஜி ஓமட்டோ இணையை வென்றது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் நைஜிரியாவை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கத்தை வென்றது. கடந்த 2014 போட்டியில் இதே நைஜிரியாவிடம் தோற்று வெறும் வெண்கலப் பதக்கத்தை மட்டுமே இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் குழுப் போட்டியில் பலம் வாய்ந்த சிங்கப்பூர் அணியை 3-2 என்ற கணக்கில் வென்று இந்தியா பெண்கள் அணி தங்கம் வென்றிருந்தது.
இதன் மூலம் ஆடவர், பெண்கள் குழுப் போட்டிகளில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. மேலும் ஒற்றையர் ஆடவர், பெண்கள் போட்டிகள் மீதமுள்ள நிலையில் அவற்றிலும் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.