டெஸ்ட்: மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து 57/4
முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 24 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஆச்சர்யமாக, இந்திய அணியில் மாற்றங்கள் எதுவுமில்லை. கோலி தலைமையில் இதுபோல ஒரு மாற்றமும் இல்லாமல் இந்திய அணி டெஸ்டில் களமிறங்குவது இதுவே முதல்முறை. இங்கிலாந்து அணியில் போப்புக்குப் பதிலாக மொயீன் அலி இடம்பெற்றுள்ளார். வோக்ஸுக்குப் பதிலாக சாம் கரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆடுகளத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசினார்கள். ரன் கணக்கை ஆரம்பிக்காத ஜென்னிங்ஸ்ஸை அட்டகாசமான பந்தினால் வீழ்த்தி எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் பூம்ரா. பிறகு அவர் ரூட்டின் விக்கெட்டையும் வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், நோ பாலால் அந்த வாய்ப்பை வீணடித்தார். ஆனால் ரூட்டை 4 ரன்களில் வெளியேற்றினார் இஷாந்த் சர்மா. பேர்ஸ்டோவ் பிறகு 6 ரன்களில் பூம்ரா பந்தில் வெளியேறினார். 55 பந்துகளை வரை எதிர்கொண்டு நிதானமாக விளையாடிய குக் 17 ரன்களில் பாண்டியா பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
Advertisement
இதனால் முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 24 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.
பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன்கள், லார்ட்ஸ் இரண்டாம் டெஸ்டில் 1 இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வென்றது. மூன்றாவது டெஸ்டில், 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அமோக வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.