துவக்க வீரர் கௌதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து செவ்வாய்கிழமை ஓய்வுபெற்றார்.
இந்திய அணியின் தலைசிறந்த துவக்க வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த கௌதம் கம்பீர் தில்லியைச் சேர்ந்தவர். இடதுகை பேட்ஸ்மேனான கம்பீர், தற்போது சர்தேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். மொத்தம் 58 டெஸ்ட் போட்டிகளில் 4,154 ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் 5,238 ரன்களும், 37 டி20 ஆட்டங்களில் 932 ரன்களும் குவித்துள்ளார். முதல் தரப் போட்டிகளில் மொத்தம் 15,041 ரன்கள் சேர்த்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 சதங்களை அடித்து அரிய சாதனைப் புரிந்துள்ளார். தொடர்ந்து 4 டெஸ்ட் தொடர்களிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அதே ஆண்டு ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதையும் பெற்றார்.
சுமார் 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்திய அணி 2007-ஆம் ஆண்டு டி20 மற்றும் 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைகளை வெல்ல முக்கியப் பங்காற்றியவர். கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கினார்.
டிசம்பர் 6-ஆம் தேதி ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் தில்லி அணிக்காக கம்பீர் களமிறங்கவுள்ளது அவருடைய கடைசிப் போட்டியாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.