முகப்பு
செய்திகள்

ரஞ்சி: புதிய உலக சாதனை படைத்தார் 21 வயது மத்திய பிரதேச கிரிக்கெட் வீரர்!

முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் 21 வயது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் 21 வயது மத்தியப் பிரதேச கிரிக்கெட் வீரர் அஜய் ரொஹேரா. 

இந்தூரில் ஹைதராபாத் - மத்திய பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம்  நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 124 ரன்களுக்குள் சுருண்டது. 21 வயது வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு விளையாடிய மத்தியப் பிரதேச அணி, 140.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள 21 வயது அஜய் ரொஹேரா மிகச்சிறப்பாக விளையாடி 5 சிக்ஸர், 21 பவுண்டரிகளுடன் 267 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இது ஓர் உலக சாதனை. 24 வருடங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த அமோல் முஸும்தார். ஹரியானாவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 260 ரன்கள் எடுத்ததே முதல்தர கிரிக்கெட்டில் ஓர் அறிமுக வீரர் எடுத்த அதிக ரன்களாக இருந்தது. அந்தச் சாதனையை அஜய் முறியடித்துள்ளார். மேலும் அதிக ரன்கள் எடுத்துள்ள மத்திய பிரதேச வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஜே.பி. யாதவ், 265 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பு உச்சபட்ச சாதனையாக இருந்தது. 

இன்னும் 3 ஓவர்கள் கொடுத்தால் தன்னால் முச்சதம் எடுக்கமுடியும் என்று ஓய்வறையில் இருந்த கேப்டன் நமன் ஓஜாவுக்குச் சைகையால் தகவல் கொடுத்தார் அஜய். ஆனால் அணியின் நலனை முன்னிட்டு,  அஜய் 267 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தார் ஓஜா.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.