கேப்டன் பதவியிலிருந்து விலக வாய்ப்புண்டு: பாகிஸ்தான் கேப்டன் தகவல்!
இதுபோல தோல்விகளை அடையும்போது கேப்டன் பதவியிலிருந்து விலகத் தோன்றும். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். ..
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தை 123 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸி அணி 2-1 என தொடரையும் கைப்பற்றியது. இதையடுத்து கேப்டன் பதவியிலிருந்து விலக வாய்ப்புண்டு என பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறியுள்ளார்.
பாகிஸ்தான் - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. நியூஸி அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கும், பாகிஸ்தான் 348 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸி 113 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டுமே இழந்து 353 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. கேப்டன் கேன் வில்லியம்ஸன் 139, ஹென்றி நிக்கோல்ஸ் 126 ரன்களை எடுத்தனர். பாக். தரப்பில் யாசிர் ஷா 4-129 விக்கெட்டை வீழ்த்தினார். இறுதி நாளான வெள்ளிக்கிழமை 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. ஆனால் நியூஸி அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாக். அணி 56.1 ஓவர்களில் 156 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பாபர் ஆஸம் 51, இமாம் உல் ஹக் 22, சர்ப்ராஸ் அகமது 28 ஆகியோர் மட்டுமே ஒரளவு ரன்களை சேர்த்தனர். நியூஸி. பந்துவீச்சாளர்கள் டிம் செளதி 3-42, அஜாஸ் பட்டேல் 3-42, வில்லியம் சாமர்வில்லே 3-52 ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் 123 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்டை வென்ற நியூஸி, 2-1 என தொடரையும் கைப்பற்றி கோப்பையை பெற்றது. நியூஸி கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஆட்ட நாயகனாகவும், பாக். வீரர் யாசிர் ஷா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானுக்குரிய சொந்த மண்ணில் (ஐக்கிய அமீரகம்) விளையாடிய ஏழு டெஸ்டுகளில் நான்கில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது. கடந்த மூன்று தொடர்களில் 2-ல் தோல்வி. 2016-க்குப் பிறகு ஆறு டெஸ்டுகளில் கடைசி நாளில் தோல்வியைச் சந்தித்துள்ளது பாகிஸ்தான். நியூஸிலாந்துக்கு வெளியே 49 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது (2-1) நியூஸிலாந்து. இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பதவியிலிருந்து விலகவேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சர்ஃப்ராஸ் கூறியதாவது:
இதுபோல தோல்விகளை அடையும்போது கேப்டன் பதவியிலிருந்து விலகத் தோன்றும். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். தென் ஆப்பிரிக்கத் தொடர் மிகவும் கடினமானது. பதவி விலகல் குறித்து முன்பே யோசித்தால் அதனால் யாருக்கும் பயனில்லை. நான் தவறு செய்தாலோ என்னால் அணி தோற்றுப்போனாலோ பதவியிலிருந்து விலகுவது குறித்து நிச்சயம் யோசிப்பேன். என்னை விடவும் ஒருவர் டெஸ்ட் கேப்டன் பதவியை வகிக்கமுடியும் என்றால் அந்த வாய்ப்பு அவருக்கு நிச்சயம் வழங்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.