பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலி!
மதுவிலக்கு அமலில் உள்ள பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பிகாரில் கள்ளச் சாராயம் குடித்த 4 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த சம்பவத்தில் மேலும் 3 பேர் பலியாகினர். இதையடுத்து இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆறு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் ஏழு பேர் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மோதிஹரியின் துர்கௌலியா மற்றும் ரகுநாத்பூர் பகுதிகளில் நிகழ்ந்தது. கிழக்கு சம்பரன் மாவட்ட ஆட்சியர் சௌரப் ஜோர்வால் கூறுகையில், "பலி எண்ணிக்கை தற்போது 4ஆக உயர்ந்துள்ளது. உடல்கள் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான சரியான காரணம் தெரியவரும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கிராம பாதுகாவலர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துர்கௌலியா காவல் ஆய்வாளர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இறந்தவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்வர்ன் பிரபாத் கூறினார். முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் ரகுநாத்பூர் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்தது தெரியவந்துள்ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.