பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!
பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது குறித்து...
பிகாரில், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சம்பரான் மாவட்டத்தின், துர்கௌலியா மற்றும் ரகுநாதபுரம் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 21 பேர் சட்டவிரோதமாக அங்கு விற்கப்பட்ட ரூ.50 மதிப்புள்ள கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி கடந்த வியாழக்கிழமை (ஏப். 2) அன்று 2 பேரும், வெள்ளிக்கிழமை அன்று 3 பேரும் பலியாகினர்.
Advertisement
இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லால் கிஷோர் ராய் மற்றும் லட்டு ஷா ஆகியோர் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளனர். மேலும், சிகிச்சையில் உள்ள 14 பேரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும்; அதில், 6 பேர் தங்களது கண் பார்வையை முழுவதுமாக இழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், கள்ளச்சாராயம் விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட நாகா ராய், ஜம்மு பைதா, ராஜா மற்றும் கலிஃபா ஆகியோரை மாவட்ட நிர்வாகம் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர்.
இத்துடன், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட பரிக்ஷன் மன்ஜ்ஹி என்பவரின் மகளுக்கு வரும் ஏப். 13 அன்று திருமணம் நடைபெறவிருந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.