இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விஹாரி - மயங்க் அகர்வாலைப் பரிந்துரை செய்யும் அனில் கும்ப்ளே!
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வாலும் விஹாரியும் களமிறங்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்...
டிசம்பர் 26 முதல் தொடங்கவுள்ள மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வாலும் விஹாரியும் களமிறங்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே.
இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
மயங்க் அகர்வால் போன்ற இளம் வீரர், அணிக்கு வேண்டிய புத்துணர்ச்சியை அளிப்பார். விஹாரி, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் வரிசையில் மயங்க் அகர்வாலும் ஏன் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கக்கூடாது? இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களுடன் மெல்போர்ன் டெஸ்டுக்குச் செல்லவேண்டும் என்று பரிந்துரைப்பேன். இஷாந்த் சர்மா, பூம்ரா, ஷமி, அஸ்வின் மற்றும் ஜடேஜா. இவர்கள்தான் கடைசி 5 பேட்ஸ்மேன்கள். எனவே விஹாரியைத் தொடக்க வீரராகக் களமிறக்கலாம்.
பெர்த் டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் முரளி விஜய் நன்கு விளையாடினார். ஆனால் கடந்த 15 டெஸ்டுகளில் ஒரே ஒரு சதம் அதுவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்துள்ளார். 5 பந்துவீச்சாளர்களுடன் விளையாடினால் தொடக்க வீரர்களை மாற்றியாகவேண்டும். கடந்த சில காலமாகச் சரியாக விளையாடாததால் ராகுல் பாதுகாப்பின்மையுடன் விளையாடுகிறார். சந்தேகத்துடன் பந்துகளை எதிர்கொள்வதால் அவருக்கு ஓர் இடைவேளை அவசியம். இந்த மனநிலையுடன் உள்ள ராகுலுடன் டெஸ்ட் போட்டிக்குச் செல்லக்கூடாது. ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட்டுகளில் அவர் விளையாடவேண்டும். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வாலுக்கு உடனடியாக வாய்ப்பு வழங்குங்கள் என்று கூறியுள்ளார்.