விஜய் ஹஸாரே: தமிழகம் வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 'சி' பிரிவில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 'சி' பிரிவில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழகம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் 45.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முன்னதாக டாஸ் வென்ற குஜராத் பேட் செய்யுமாறு தமிழகத்தை அழைத்தது. அவ்வாறு ஆடிய தமிழகத்தில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கெளஷிக் காந்தி 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 127 ரன்கள் விளாசினார். கேப்டன் விஜய் சங்கர் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்கள் அடித்தார்.
முரளி விஜய் 11, பாபா அபராஜித் 16, ஜெகதீசன் 27 ரன்கள் எடுக்க, இதர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர். குஜராத் தரப்பில் சிந்தன் கஜா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 312 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய குஜராத்தில் பார்கவ் மெராய் அதிகபட்சமாக 101 ரன்கள் அடித்தார். கேப்டன் பிரியங்க் பஞ்சல் 42 ரன்கள் எடுக்க, எஞ்சிய விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தன. தமிழக தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் கிறிஸ்ட் 3, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதர ஆட்டங்களில் மகாராஷ்டிரம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்காலையும், தில்லி 55 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேசத்தையும், ஹைதராபாத் 128 ரன்கள் வித்தியாசத்தில் சர்வீசஸையும், மும்பை 74 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தையும் வென்றன.