இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது: ட்விட்டரில் அஸ்வின் ஆவேசம்!
ஜாதி ரீதியாக அஸ்வினைத் தரக்குறைவாக விமரிசனம் செய்பவர்களுக்குப் பதிலடியாக அந்த ட்வீட் இருந்தது...
சமூகவலைத்தளங்களில் வெளிப்படையாகத் தனது கருத்துகளைக் கூறுபவர், பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
சமீபத்தில் இந்திய அணியின் வெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது அவருக்குப் போட்டியாக உள்ள சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய இருவரையும் பாராட்டினார். ரசிகர்களுடன் அவ்வப்போது ட்விட்டரில் ஜாலியாக உரையாடுவார். இதனால் அவருடைய ட்வீட்களுக்கும் ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு இருக்கும்.
இந்நிலையில் நேற்று ட்விட்டரில் ஆவேச ட்வீட் ஒன்றை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார் அஸ்வின். ஜாதி ரீதியாக அஸ்வினைத் தரக்குறைவாக விமரிசனம் செய்பவர்களுக்குப் பதிலடியாக அந்த ட்வீட் இருந்தது. அஸ்வின் ட்வீட் செய்ததாவது:
சமூகவலைத்தளங்களில் வெளிப்படும் வெறுப்பை பிரபலங்கள் சகித்துக்கொள்வார்கள். இங்கு என்னைப் பிடிக்காதவர்களும் விமரிசனம் செய்பவர்களும் இருப்பார்கள். ஆனால் ஒரு விஷயத்தை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது. மதம் மற்றும் ஜாதி தொடர்பான வெறுப்புகள். இதுவும் இனவாதம்தான். அப்படிச் செய்பவர்களை விமரிசனம் செய்வது என்கிற முடிவை எடுத்துள்ளேன். நன்றிகள் என்று ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார்.