விழியங்கம்: ரஞ்சி டிராபி தொடரில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான தென் மண்டல சையத் முஷ்டாக் அலி டி20 லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், கருண் நாயரின் அபார சதத்தின் காரணமாக கர்நாடக அணி தமிழகத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ரஞ்சி டிராபி தொடரில் விளையாடும் அணிகளின் பிரிவில் தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஐதராபாத், ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கோவா அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த ஆறு அணிகளுக்கு இடையே சையத் முஷ்டாக் அலி டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆந்திராவின் விழியங்கம் நகரத்தில் வெள்ளியன்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி கர்நாடகா அணியின் மயாங் அகர்வால், கருண் நாயர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆரம்பம் முதலே ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்த போதிலும், மறுமுனையில் கருண் நாயர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தமிழக பந்துவீச்சாளர்களை சிதறடித்த கருண் நாயர் 48 பந்தில் சதத்தினை எட்டினார்.52 பந்துகளில் தலா 8 பவுண்டரி, சிக்சர்களுடன் அவர் 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கர்நாடகா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. தமிழக அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் தமிழ்நாடு களம் இறங்கியது. தொடக்க வீரர் வாஷிங்டன் சுந்தர் 26 பந்தில் 34 ரன்னும், கேப்டன் விஜய் சங்கர் 20 ரன்னும், சஞ்சய் யாதவ் 19 ரன்னும், ஜெகதீசன் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் குறிப்பிட்டு சொல்லும் படி ஆடாமல் ஒற்றையிலக்க ரன்களில் வெளியேற, இறுதியில் தமிழ்நாடு 16.3 ஓவரில் 101 ரன்னில் சுருண்டது.
இதனால் கர்நாடகா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கர்நாடகா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் துபே 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன் மூலம் கர்நாடகா தான் விளைவயாடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.