இந்திய அணியின் சரிவைத் தடுத்த கோலியின் 85*: தென் ஆப்பிரிக்கா 335 ரன்கள்!
2-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 85, பாண்டியா 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்...
இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இரண்டாம் நாளன்று அந்த அணி 335 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 2-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 85, பாண்டியா 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தொடக்க வீரர் விஜய் சிறப்பாக விளையாடினாலும் எதிர்பாராத விதமாக 46 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. ராகுல் 10, ரோஹித் சர்மா 10, பார்தீவ் படேல் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள். 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 152 ரன்கள் பின்தங்கியுள்ளது.