விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் காலிறுதியில் இந்திய வீரர்
விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் காலிறுதிக்கு இந்திய வீரர் டி விஜ் சரண்-ஏ.சிதக் இணை முன்னேறியுள்ளது. டி விஜ் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் காலிறுதிக்கு இந்திய வீரர் டி விஜ் சரண்-ஏ.சிதக் இணை முன்னேறியுள்ளது. டி விஜ் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டங்களில் செக் நாட்டின் 7-ஆம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை 6-3, 7-6 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் வீழ்த்தினார். இதே போல் மற்றொரு ஆட்டத்தில் உலகின் 35-ஆம் நிலை வீராங்கனை எகடெரினா மகரோவா 3-6, 4-6 என நேர் செட்களில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
அதே நேரத்தில் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என ரோடினாவையும், ஓஸபென்கோ 7-6, 6-0 என சாஸ்நோவிச்சையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர். கெர்பர், சிபுல்கோவா உள்ளிட்டோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.
ஏற்கெனவே முன்னணி வீராங்கனைகளான ஷரபோவா, பெட்ரா விட்டோவா, வோஸ்னியாக்கி, சிமோனா ஹலேப், ஸ்லோன், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் தோல்வியுற்று வெளியேறி விட்டனர்.
காலிறுதியில் பெடரர், நடால்: ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 6-0, 7-5, 6-4 என நேர் செட்களில் மன்னாரினோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரனோயிக் 6-3, 6-4, 6-7, 6-2 என்ற கணக்கில் மெக்டொனல்டை வீழ்த்தினார். நடால், நிஷிகோரி, ஐஸ்னர், ஆண்டர்சன், டெல் பொட்ரோவும் காலிறுதிக்கு முன்னேறினர். இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் டி விஜ்-சிதக் இணை காலிறுதிக்கு முன்னேறியது.