முகப்பு
செய்திகள்

இலங்கை கேப்டனுக்கு 2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி நடவடிக்கை

இலங்கை கேப்டன், பயிற்சியாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி தண்டனை அறிவித்து திங்கள்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.

Updated On : 16 ஜூலை, 2018 at 8:11 PM
பகிர்:

இலங்கை கேப்டன், பயிற்சியாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி தண்டனை அறிவித்து திங்கள்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செயின்ட்லூசியாவில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்த முயன்றதாக இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து நடுவர்கள் அலீம் தர், இயான் கெளட் ஆகியோர் புகார் செய்தனர். இதனால் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது 2 மணி நேரம் போட்டியில் பங்கேற்காமல் சண்டிமால் தலைமையில் இலங்கை அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ஐசிசி நடத்தை விதிகள் 2.2.9. மீறியதாக சண்டிமால் மீது குற்றம் சாட்டப்பட்டு ஒரு போட்டியில் விளையாடத் தடை, 100 சதவீத ஊதியம் அபராதம் நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையே தனது வீரர்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என இலங்கை கிரிக்கெட் அமைப்பு தெரிவித்திருந்தது.

Advertisement

இந்நிலையில், இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கே மற்றும் இலங்கை அணி மேலாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோருக்கு 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி தண்டனை வழங்கியுள்ளது. 

எனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக காலே மற்றும் கொழும்புவில் நடைபெறும் இரு டெஸ்ட் போட்டிகள் மற்றும் அதே அணிக்கு எதிராக தம்பூலா மற்றும் கண்டியில் நடக்கும் 4 ஒருநாள் போட்டிகளில் இவர்கள் 3 பேரும் பங்கேற்காது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 செப்டம்பர் முதல் தினேஷ் சண்டிமாலுக்கு தடை விதிக்கப்படுவது இது 2-ஆவது முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.