நீங்கள் தூற்றினாலும் பரவாயில்லை. தயவு செய்து களத்துக்கு வந்து இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள் என இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார்.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட விடியோவில் பேசியதாவது:
இதுவரை மைதானத்துக்கு வராமல் இருக்கும் ரசிகர்களாகிய உங்களுக்காக தான் இந்த விடியோ பதிவை வெளியிடுகிறேன். நீங்கள் கால்பந்து விளையாட்டை நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து நேரில் வந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள். ஏனென்றால் உலகளவில் நாங்களும் சிறந்த அணிதான் மற்றும் தாய்நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதே அதற்கு இரு முக்கிய காரணங்களாகும். நீங்கள் ஒருமுறை மைதானத்துக்கு வந்துவிட்டால், நிச்சயம் வீடு திரும்புபம்போது அதே மனநிலையில் இருக்க மாட்டீர்கள் என வாக்குறுதி அளிக்கிறேன்.
உங்களில் சிலர் ஐரோப்பிய காலபந்து லீக் அணிகளின் ஆதரவாளர்களாக இருக்கலாம். அதேநிலை இங்கு இல்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் உங்கள் நேரத்தை வீணடிக்கும் விதமாக நாங்கள் நிச்சயம் செயல்பட மாட்டோம். இங்கு இந்திய கால்பந்தின் மீது நம்பிக்கை இழந்த உங்கள் அனைவருக்கும் கூட இதே கோரிக்கையை முன்வைக்கிறேன். தயவு செய்து மைதானத்துக்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.
மைதானத்தில் வந்து எங்களை தூற்றுங்கள், விமர்சியுங்கள், கடுஞ்சொற்களால் கூட வஞ்சியுங்கள், ஆனால் ஒருநாள் உங்கள் மனம் மாறும், எங்களுக்காக நிச்சயம் ஆதரவு அளிப்பீர்கள். நீங்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே தெரியாது. உங்களின் ஆதரவு எங்களுக்கு எத்தனை முக்கியம் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
ஆகையால், தயவு செய்து இந்திய கால்பந்து ஆட்டங்களுக்கு தயவு செய்து மைதானத்துக்கு நேரில் வந்து ஆதரவளியுங்கள். வீட்டிலும், அலுவலகத்திலும், பொது இடத்திலும் இந்திய கால்பந்து குறித்து விவாதியுங்கள். இந்திய கால்பந்துக்கு நீங்கள் அனைவரும் தேவை என்று உணர்வுப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.