தரமான உணவு வழங்கப்படவில்லை என இந்திய ஆடவர் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் புகார் தெரிவித்ததை அடுத்து பிராந்திய பயிற்சி மையங்களில் தகுதி திறன் மதிப்பீடு மற்றும் அதிரடி ஆய்வு நடத்த சாய் திட்டமிட்டுள்ளது.
நெதர்லாந்தின் பிரெடா நகரில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்காக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தேசிய பயிற்சி முகாம், பெங்களூருவின் சாய் பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வீரர்களுக்கு சுகாதார மற்ற தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என பயிற்சியாளர் ஹரேந்திர சிங் புகார் தெரிவித்திருந்தார். இது விளையாட்டு வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் கூறியதாவது:
இந்த நிலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. வீரர்களுக்கு தரமான உணவு வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். புதிய சமையலர், தரமான உணவு பொருள்கள், சுகாதார மேம்பாடு தொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.