முகப்பு
செய்திகள்

அஜிங்க்ய 'ஜென்டில்மேன்' ரஹானே

ரஹானேவின் இந்தச் செயல் கிரிக்கெட் ஆர்வலர்கள் மட்டுமின்றி பலரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூகவலைதளங்களிலும் இச்செயல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Updated On : 16 ஜூன், 2018 at 5:29 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:27 PM

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வியாழக்கிழமை தொடங்கியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. மேலும் இரண்டே நாட்களில் இந்தப் போட்டியும் நிறைவடைந்தது. அதிலும் குறிப்பாக 2-ஆம் நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணி இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்துள்ளது.

இந்நிலையில், பரிசு வழங்கும் நிகழ்வில் இப்போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. இதை இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானே பெற்றுக்கொண்டார். பின்னர் அந்தக் கோப்பையுடன் அணி வீரர்கள் திரண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Advertisement

அப்போது அஜிங்க்ய ரஹானே செய்த காரியம் அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருகிறது. இந்திய அணி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்ட அடுத்த நொடி, அங்கே நின்றிருந்த ஆப்கானிஸ்தான் வீரர்களையும் அங்கு அழைத்து வந்த ரஹானே, இந்திய அணியினருடன் இணைந்து கோப்பையுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கிரிக்கெட் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான், முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் களம்கண்டதை ஊக்கமளிக்கும் வகையில் ரஹானேவின் இந்தச் செயல் கிரிக்கெட் ஆர்வலர்கள் மட்டுமின்றி பலரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் இச்செயல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.