முகப்பு
செய்திகள்

பேர்ஸ்டோவ் அதிரடி சதம்: 5-வது ஒருநாள் ஆட்டத்தையும் தொடரையும் வென்றது இங்கிலாந்து அணி!

நியூஸிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் ஆட்டம் மற்றும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

நியூஸிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் ஆட்டம் மற்றும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 5-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அது சரியான முடிவு என்பதுபோல நியூஸிலாந்து அணி 49.5 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வோக்ஸ், ரஸித் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தொடக்க வீரர் கப்தில் 47, நிகோல்ஸ் 55, சாண்ட்னர் 67 ரன்கள் எடுத்தாலும் இதர வீரர்கள் சொதப்பியதால் நியூஸிலாந்து அணியால் பெரிதளவில் ரன் குவிக்க முடியாமல் போனது. 

எளிதான இலக்கை அதிரடியான ஆட்டம் மூலம் அடைந்தது இங்கிலாந்து அணி. ஜானி பேர்ஸ்டோவும் ஹேல்ஸும் முதல் விக்கெட்டுக்கு 20.2 ஓவர்களில் 155 ரன்கள் சேர்த்து அசத்தினார்கள். ஹேல்ஸ் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 58 பந்துகளில் சதத்தை எட்டினார். இது இங்கிலாந்தின் 3-வது அதிவேக சதமாகும். பிறகு அவர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். 32.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து 5-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரை 3-2 என்கிற கணக்கில் வென்றது. ஜானி பேர்ஸ்டோவ் ஆட்ட நாயகன் விருதும் கிறிஸ் வோக்ஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.