ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை அடைந்தது நேபாளம்!
தற்போது 2022 வரை நேபாளத்துக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நாட்டுக்கு இனிமேல்...
பப்புவா நியு கினியா அணியைத் தோற்கடித்ததன் மூலம் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை அடைந்துள்ளது நேபாள அணி.
ஹராரேவில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பைத் தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் விளையாடிய பப்புவா நியூ கினியா அணி 27.2 ஓவர்களில் 114 ரன்களுக்குள் சுருண்டது. அதன்பிறகு இந்த எளிதான இலக்கை 23 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு அடைந்தது நேபாளம். இந்தத் தோல்வியால் பப்புவா நியு கினியா ஒருநாள் அந்தஸ்தை இழந்துள்ளது. மேலும் அதனுடன் சேர்ந்து ஹாங்காங்கும் ஒருநாள் அந்தஸ்தை இழந்துள்ளது.
எனினும் சூப்பர் சிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெறாததால் நேபாள அணியால் 2019 உலகக் கோப்பையில் விளையாடமுடியாது.
அரசின் தலையீடு உள்ளிட்ட பல பிரச்னைகளால் ஏப்ரல் 2016-ல் நேபாள கிரிக்கெட் சங்கத்தை ஐசிசி தடை செய்துள்ளது. அதன்பிறகு நேபாள கிரிக்கெட் ஐசிசி வசம் சென்றது. இந்தத் தடையால் நேபாள அணிக்கு, ஐசிசி போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் எதுவும் இல்லையென்றாலும் ஐசிசியிடமிருந்து கிரிக்கெட் வளர்ச்சிக்கான நிதி எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது 2022 வரை நேபாளத்துக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நாட்டுக்கு இனிமேல் ஐசிசியின் நிதியுதவி கிடைக்கும். அதன் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்தச் சாதனை பெரிதும் உதவப்போகிறது.