சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஆசிய போட்டி சாம்பியன் ஜப்பானை 9-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்தியா.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் ஓமனை 11 கோல்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல்கணக்கிலும் நடப்பு சாம்பியன் இந்தியா வென்றிருந்தது.
இதற்கிடையே மூன்றாவது ஆட்டமாக ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற ஜப்பானுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் அபாரமாக ஆடி கோல் மழை பொழிந்தனர். முடிவில் 9-0 என்ற கோல்கணக்கில் ஜப்பானை பந்தாடியது இந்தியா.
இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது இந்தியா. 6 புள்ளிகளுடன் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்டிரைக்கர்கள் லலித் உபாத்யாய, மந்தீப் சிங் இரண்டு கோல்களையும், ஹர்மன்பிரீத் சிங், அக்ஷதீப் சிங், சுமித், உள்ளிட்டோரும் கோலடித்தனர்.
இந்திய அணி எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான அணியாக விளங்கியது. நாங்கள் எங்களால் முடிந்தவரை போராடினோம். வேகம், துடிப்பான ஆட்டத்தால் இந்தியா வென்றுவிட்டது என ஜப்பான் பயிற்சியாளர் ஐக்மேன் கூறினார்.