முகப்பு
செய்திகள்

10-ஆவது சதம் எனது கிரிக்கெட் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது: அஜிங்க்ய ரஹானே

டெஸ்ட் அரங்கில் சுமார் 2 வருட இடைவேளைக்குப் பின்னர் தற்போது தான் சதமடித்துள்ளார்.

Updated On : 30 ஆகஸ்ட், 2019 at 12:34 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:27 PM

இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன் முக்கிய காரணமாக துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே திகழ்ந்தார். இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 81 மற்றும் 102 ரன்கள் குவித்தார். குறிப்பாக டெஸ்ட் அரங்கில் சுமார் 2 வருட இடைவேளைக்குப் பின்னர் தற்போது தான் சதமடித்துள்ளார்.

இதுகுறித்து அஜிங்க்ய ரஹானே கூறியதாவது:

எனது கிரிக்கெட் வாழ்வில் 10-ஆவது சதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது. அந்த நேரத்தில் எப்படி கொண்டாடுவது என்பது குறித்து எல்லாம் நான் சிந்திக்கவில்லை, அது தற்செயலாக அமைந்தது தான். ஏனென்றால் இந்த சதத்துக்காக நான் 2 வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. 

Advertisement

ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் பயிற்சி செய்து தயார்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை நான் கடந்த 2 வருடங்களாகவும் கடைப்பிடித்து வருகிறேன். அந்த வகையில் இந்த சதம் எனக்கு மனதளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 

முதல் டெஸ்டில் மே.இ.தீவுகளின் பந்துவீச்சு நன்றாக இருந்தது. இந்திய அணியும் ஒரு கட்டத்தில் தத்தளித்தது. எனவே இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்திய அணிக்கு நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். எனவே சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி எனது ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். வேறு எதையும் கருத்தில் கொள்ளவில்லை.

விராட் கோலி உடனான பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விஹாரி போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் போதும் அதே ஆட்டத்திறனை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.