கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறன. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளது பிசிசிஐ.
பிசிசிஐயின் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் இன்று இதுகுறித்து பேட்டியளித்ததாவது:
உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. எங்களுடைய நிலைமையை ஐசிசிக்குத் தெரிவிப்போம். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் குறித்து அரசிடம் பேசிவருகிறோம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசிக்குக் கடிதம் எழுதவுள்ளோம். இந்த வருட ஐபிஎல் போட்டியில் தொடக்க விழா எதுவும் கிடையாது. அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை, புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.