சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் ஹிமாசல பிரதேச அணியிடம் தமிழக அணி தோல்வியடைந்துள்ளது.
சூரத்தில் நடைபெற்ற இந்த டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் இந்த முறையும் சரியாக விளையாடாமல் தமிழக பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். இதனால் தமிழக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இதர பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க முரளி விஜய் மட்டும் கடைசி ஓவர் வரை விளையாடி அணிக்கு ஓரளவு கெளரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்தார். அவர் 58 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்தார். ஹிமாசல அணியின் அங்கித் ராஜன் மைனி 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்த எளிதான இலக்கை 19 ஓவர்களில் அடைந்தது ஹிமாசல பிரதேச அணி. அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடக்க வீரர் பிஎஸ் சோப்ரா 53 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குரூப் பி அணியில் உள்ள தமிழக அணி 4 ஆட்டங்களில் 2-ல் மட்டும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது. முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் என்கிற நிலையில் இந்தத் தோல்வியால் தமிழக அணி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவது மேலும் கடினமாகிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.