பிரெஞ்சு ஓபன்: அரையிறுதியில் ஃபெடரர் - நடால் மோதல்!
ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டம் விரைவில் நடைபெறவுள்ளது..
ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டம் விரைவில் நடைபெறவுள்ளது.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் போட்டியில், காலிறுதி ஆட்டங்களில் ஃபெடரரும் நடாலும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.
காலிறுதி ஆட்டத்தில், நடால் 6-1, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் நிஷிகோரியைத் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 51 நிமிடங்கள் நடைபெற்றது.
37 வயது ஃபெடரர், 7-6 (7/4), 4-6, 7-6 (7/5), 6-4 என்கிற செட் கணக்கில் வாவ்ரிங்காவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் கடந்த 28 வருடங்களில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு நுழைந்த வயதான வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஃபெடரர். இதற்கு முன்பு, 1991 யு.எஸ். ஓபன் போட்டியில் 39 வயது ஜிம்மி கானர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஃபெடரருக்கு எதிரான ஆட்டங்களில் 23-15 என அதிக ஆட்டங்களில் வென்று முன்னிலை பெற்றுள்ளார் நடால். எனினும் நடாலுக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களையும் ஃபெடரரே வென்றுள்ளார். அதேசமயம் களிமண் தரையில் நடால் 13-2 என முன்னிலை பெற்றுள்ளார். பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருவரும் 5 முறை மோதி, அனைத்திலும் வென்றுள்ளார் நடால். கடைசியாக 2011-ல் இருவரும் மோதினார்கள். இதனால் அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.