முகப்பு
செய்திகள்

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாது: விமரிசனங்கள் குறித்து ஷிகர் தவன்

விமரிசனத்தை நான் எப்படி எதிர்கொள்கிறேன் எனக் கேட்கிறீர்கள். முதலில் நான் செய்தித்தாள்களைப் படிக்கமாட்டேன்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:21 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா தொடரையும் 2-2 என சமன் செய்துள்ளது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 117, உஸ்மான் கவாஜா 91, அஷ்டன் டர்னர் 84 ரன்களுடன் வெற்றிக்கு வித்திட்டனர். முதலிரண்டு ஆட்டங்களை இந்தியாவும், மூன்றாவது ஆட்டத்தை ஆஸி.யும் வென்றிருந்தன. நான்காவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை எடுத்தது இந்தியா. ரோஹித்துடன் இணைந்து அபாரமாக ஆடிய ஷிகர் தவன் தனது 16-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 97 பந்துகளில் அவர் சதமடித்தார். ஷிகர் தவன் 3 சிக்ஸர், 18 பவுண்டரியுடன் 115 பந்துகளில் 143 ரன்களை விளாசி பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 92 பந்துகளில் 95 ரன்களை எடுத்தார் ரோஹித்.

இந்நிலையில் சமீபகாலமாகச் சரியாக விளையாடாமல் இருந்த தவன், நேற்றைய சதத்தின் மூலம் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விமரிசனத்தை நான் எப்படி எதிர்கொள்கிறேன் எனக் கேட்கிறீர்கள். முதலில் நான் செய்தித்தாள்களைப் படிக்கமாட்டேன். எனக்குத் தேவையில்லாத தகவல்களை எடுத்துக்கொள்ள மாட்டேன். எனவே என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. என் உலகில் நான் வாழ்கிறேன். என் சிந்தனைகள் எந்த திசையில் செல்லவேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன். 

நிம்மதியுடன் இருக்கும்போது நான் நன்றாக விளையாடுவேன். மனம் உடைகிறபோது நான் அதிலிருந்து விரைவாக வெளியேறி விடுவேன். மக்கள் என்னைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் எனத் தெரியாது. நல்ல மனநிலையில் இருந்து என் செயல்களைச் செய்யவேண்டும் என எண்ணுவேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.