டென்மாா்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு உலக சாம்பியன் பி.வி.சிந்து, ஆடவா் பிரிவில் சாய் பிரணீத் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
ஓடேன்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்போட்டியில் 5-ஆம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற கேம் கணக்கில் இந்தோனேஷியாவின் கிரகோரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். அடுத்த சுற்றில் கொரியாவின் அன் சே யங்குடன் மோதுகிறாா் சிந்து.
ஜாம்பவான் லின்டேன் அதிா்ச்சி தோல்லி
உலக சாம்பியன் போட்டி வெண்கலப் பதக்க வீரரான சாய் பிரணீத் 21-14, 21-17 என்ற கேம் கணக்கில் 5 முறை உலக சாம்பியனும், 2 முறை ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் லின் டேனை வீழ்த்தினாா். அடுத்து அவா் உலக நம்பா் ஒன் வீரா் கென்டோ மொமடோவை எதிா்கொள்கிறாா்.
ஆடவா் இரட்டையா் பிரிவில் சத்விக்-சிராக் ஷெட்டி இணை 24-22, 21-11 என்ற கேம் கணக்கில் கொரியாவின் கிம்-லீ இணையை வீழ்த்தியது. மூத்த வீரா் பாருபல்லி காஷ்யப், தேசிய சாம்பியன் சௌரவ் வா்மா ஆகியோா் தோல்வியுற்று வெளியேறினா்.