இந்த வருடக் கடைசி முதல் நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன.
100 நாள்களாகச் சமூகப் பரவல் இல்லாமல் கரோனா வைரஸை விரட்டிய நாடாக உள்ளது நியூசிலாந்து. இதையடுத்து அங்குச் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் நடைபெறவுள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகள் நியூசிலாந்துக்குச் சென்று சர்வதேசத் தொடர்களில் விளையாடவுள்ளன. அனைத்து அணிகளும் நியூசிலாந்துக்கு வருகை தர சம்மதம் தெரிவித்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டேவிட் ஒயிட் தெரிவித்துள்ளார். இதனால் 37 நாள்களுக்குச் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நியூசிலாந்தில் நடைபெறும் என அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகள் நியூசிலாந்தில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளன. வங்கதேச அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரிலும் விளையாடவுள்ளன.