இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இலங்கையில் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. ஆனால் இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் நிலவுவதால் இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறுமா எனச் சந்தேகமாக உள்ளது. வழக்கமாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதனால் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரும் வெளிநாட்டில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த வருட ஜனவரி மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இலங்கையில் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகே இலங்கையிலேயே தங்கி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது இங்கிலாந்து அணிக்குச் சுலபமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
எனினும் பிசிசிஐ தரப்பு இதுகுறித்து தகவல் தெரிவிக்க மறுத்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க இன்னும் பல மாத காலம் உள்ளதால் இப்போதே இதுகுறித்து விவாதிக்க வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.