எனக்குத் தெரிந்தது எல்லாம் கிரிக்கெட்தான்: ரெய்னா (விடியோ)
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுரேஷ் ரெய்னா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோவுடன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுரேஷ் ரெய்னா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோவுடன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை நினைவுகூறும் வகையில் விடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார். இத்துடன், ஓய்வு பெற்றது பற்றிய தனது உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் தனது மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் உள்ளிட்டோரின் ஆதரவு மற்றும் தியாகம் இல்லையெனில் இந்தப் பயணம் சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஆதரவு இல்லையெனில் எதுவுமே சாத்தியமாகியிருக்காது என்று தெரிவித்துள்ள அவர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி உள்ளிட்டவர்களின் தலைமையின் கீழ் விளையாடியது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் கனவை நனவாக்கி, உதவிய உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்துக்கும், இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவின் இறுதியாக, அவரது ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ரெய்னா பதிவிட்டுள்ள விடியோ: