கூடுதல் சவால்களுக்குக் காத்திருக்கிறேன்: வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்
கூடுதல் சவால்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்...
சர்வதேச கிரிக்கெட்டில் கூடுதல் சவால்களுக்காகக் காத்திருக்கிறேன் என்று இந்திய அணிக்காக விளையாடிய தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு சுருண்டது. இந்திய வீரர் பாண்டியா ஆட்டநாயகன் ஆனார்.
இந்த ஆட்டத்தின் மூலம் தமிழக வீரர் டி. நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்து முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். தனது முதல் ஒருநாள் ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார் நடராஜன்.
கிரிக்கெட் வீரர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் நடராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இதையடுத்து தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் நடராஜன் தெரிவித்ததாவது:
இந்திய அணிக்காக விளையாடுவது வித்தியாசமான அனுபவம். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. கூடுதல் சவால்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்