ஐபிஎல்-லில் இருந்து நீக்கப்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ரூ. 4,800 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2009-ல் ஐபிஎல் கோப்பையை வென்ற அணி டெக்கான் சார்ஜர்ஸ். ஹைதராபாத் நகரின் சார்பாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றது. 2008 முதல் 2012 வரை ஐபிஎல்-லில் விளையாடிய இந்த அணியை 2012-ல் நீக்கியது பிசிசிஐ. வங்கி உத்தரவாதத் தொகையான ரூ. 100 கோடியைச் செலுத்தத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்பிறகு ஹைதராபாத் சார்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் போட்டியில் பங்கேற்றது.
இதையடுத்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளரான டெக்கான் கார்னிகல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மும்பை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.கே. தக்கார் இந்த வழக்கை விசாரித்தார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கியது சட்டவிரோதமானது. இதனால் அந்த அணிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 4800 கோடி வழங்கவேண்டும், 2012 முதல் 10 சதவீத வட்டியை வழங்கவேண்டும் என பிசிசிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.