ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படும் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகள் நடைபெறவுள்ள ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் பற்றிய தேதிகளையும் ஐசிசி அறிவித்துள்ளது.
இதன்படி, 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 14, 2021-இல் நடைபெறுகிறது.
2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 13, 2021-இல் நடைபெறுகிறது.
2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 26, 2023-இல் நடைபெறுகிறது.
ஐசிசியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காகத்தான் பிசிசிஐ காத்திருந்தது. எனவே, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.