ஐபிஎல் போட்டிக்கான பயிற்சிக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முன்பே சென்று விட சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ முதலில் அறிவித்தது.
இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சிக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முன்பே சென்று விட சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் போட்டியை மூன்று முறை வென்ற சிஎஸ்கே அணி, ஆகஸ்ட் 2-ம் வாரம் அங்குச் சென்று பயிற்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. மற்ற அணிகள் ஆகஸ்ட் 3-ம் வாரத்தின்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல எண்ணியுள்ள நிலையில் மற்ற அணிகளுக்கு முன்பே அங்குச் சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி.